கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த ஷேக் தாவூத் என்ற இயற்பெயர் கொண்ட தமிழ் திரைப்பட இயக்குனர் தாமிரா இன்று காலமானார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 20 நாட்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் தனது 53 ஆவது வயதில் இன்று காலையில் அவர் காலமானார். ரெட்டைச் சுழி, ஆண் தேவதை போன்ற படங்களை இயக்கிய இவர் , கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சென்னையில் இன்று உயிரிழந்தார். இயக்குநர் கே. பாலச்சந்தரிடம் பணியாற்றிய தாமிரா, ரெட்டைச் சுழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் 2010-இல் வெளியானது. இதன் பின்னர் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் ஆகியோரை வைத்து ஆண் தேவதை என்ற படத்தை இயக்கினார். அடுத்ததாக தனது மூன்றாவது படத்தை இயக்குவதற்கான கதை விவாதம் உள்ளிட்ட பணிகளில் தற்போது தாமிரா ஈடுபட்டு வந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளாார்.
தாமிராவின் உடல் மருத்துவமனையிலிருந்து நேரடியாக திருநெல்வேலிக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. அவரது சொந்த ஊரில் இறுதிச் சடங்குகள் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.